தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளைச் செய்யவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
கோவை, திருச்சி மண்டலங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 18 நாட்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 60 -க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் மன நிறைவு அளிக்கவில்லை. பன்றிக் காய்ச்சலுக்கான டாமி ஃப்ளு மாத்திரைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதன் மூலமும் காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்தலாம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.