முதல்வருக்கு ஆதரவு: 700 கி.மீ. கடந்து வந்த 80 வயது மூதாட்டி
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க 700 கி.மீட்டர் தொலைவைக் கடந்து வந்த 80 வயது மூதாட்டியின் செயல் எல்லோரையும் நெகிழவைத்தது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு80). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வள்ளியூரில் இருந்து ரயிலில் புறப்பட்டு, சென்னைக்கு திங்கள்கிழமை காலை அடைந்தார்.
அங்கிருந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தின் வளாகத்துக்கு வந்தார். அவரைப் பார்க்க பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆனாலும் உணவு சாப்பிடாமல் நீண்ட நேரமாக சின்னப்பொண்ணு காத்திருந்தார்.
நேரம் செல்ல செல்ல அந்த மூதாட்டி பற்றி முதல்வருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நீண்ட நேரத்துக்குப் பிறகு, அவரை இல்லத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
உள்ளே சென்று முதல்வரை சந்தித்த சின்னப்பொன்னு, எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான் என்று தெரிவித்தார். அதற்கு சின்னப்பொண்ணுக்கு பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சின்னப்பொன்னு மகிழ்ச்சியுடன் வெளியே வந்து உணவு சாப்பிட்டார்.