ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி உலக சாதனை படைத்திருக்கும் இஸ்ரோவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சு. திருநாவுக்கரசர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இந்தியா உலக சாதனை படைத்திருக்கிறது.
ஏற்கனவே இஸ்ரோ அமைப்பு 20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சாதனையை புரிந்திருக்கிறது. இத்தகைய சாதனைகளை படைப்பதற்கு அரும்பாடுபட்ட விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும், பணியாற்றிய ஊழியர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் அறிவியல் துறையில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா தமது பாதையை வகுக்க வேண்டுமென்ற நோக்கத்தில்
முதல் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இன்று உலக சாதனை படைத்த இஸ்ரோ நிறுவனத்தை 1962 இல் நிறுவி, தொலைநோக்குப் பார்வையோடு
செயல்பட்டார். அவரது முயற்சிக்கு அன்று உறுதுணையாக இருந்தவர் டாக்டர் விக்ரம் சாராபாய்.
விண்வெளித் துறையில் இந்தியா உலக சாதனை படைத்திருக்கிற இந்த நேரத்தில் இதை பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். மேலும் பல சாதனைகளை படைக்க இஸ்ரோ நிறுவனத்தை வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.