அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தீர்ப்புக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிராக கடந்த 1996-ஆம் ஆண்டில் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான மேல்முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
இதுதொடர்பாக, தில்லியில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
இந்த வழக்கை விரிவாக விசாரித்து நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கும் என்று எதிர்பார்த்தோம். அது அவ்விதமே நடந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, உத்வேகத்தை தரும் வகையிலும், வரவேற்கத்தக்க வகையிலும் அமைந்துள்ளது.
ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை நீதிமன்றம் எடுக்கும் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்கிறது என்றார் அவர்.
முரளிதர ராவ் கருத்து: இதனிடையே, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக பொதுச் செயலாளரும், தமிழக மேலிடப் பொறுப்பாளருமான முரளிதர ராவ், "தற்போது சசிகலாவால் முதல்வராக்கப்படும் நபர் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது எளிதல்ல; இந்த விவகாரத்தில் மாநில ஆளுநர் சரியான முடிவெடுக்க வேண்டும்' என்றார்.