புது தில்லி: அதிமுக பொதுச் செயலர் சசிகலா உட்பட 3 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சில முக்கிய ஆதாரங்களை சுட்டிக்காட்டினர்.
அதில், ஒரே நாளில் 10 நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பது, தவறான வழியில் வருமானம் ஈட்டப்பட்டிருப்பதை நிரூபிக்கிறது.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை தனி நீதிமன்றம், சில அடிப்படை ஆதாரங்களை வைத்துத்தான் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாகக் கூறப்பட்ட 1991 முதல் 1996 வரையிலான கால கட்டத்தில் சுமார் 34 நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது.
மேலும், சசிகலாவும், சுதாகரனும் தனித்தனியாக நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் சொத்துக்களை வாங்குவதைத் தவிர வேறு எந்த வேலையிலும் ஈடுபடவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களாக ரூ.2.15 கோடி அளவுக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா பெற்றுக் கொண்டது எந்த வகையிலும் சட்டப்படியான வருமானமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒரு அரசு ஊழியர் என்ற அடிப்படையில் அவர் பெற்றுள்ள பரிசுப் பொருட்கள் சட்டத்தின் அடிப்படையில் மட்டும் தவறானது அல்ல, அரசில் அவரது பங்கு, அவர் வகித்த பதவி ஆகியவற்றுக்கும் விரோதமானது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.