டி.டி.வி. தினகரன் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியானவர் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வேலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. இருந்தும் அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காததன் பின்னணியில் பெரிய சதி உள்ளது.
அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு டி.டி.வி. தினகரன் தகுதியானவர். அவர், பெரிய குளம் தொகுதி எம்.பி.யாகவும், மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம், தீபா இருவரையும் காலம் நிராகரிக்கும்.
சமூக வலைத்தளங்களில் என்னை பற்றிய விமர்சனம் செய்து வருகிறார்கள். விமர்சிக்கக்கூடிய இடத்தில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.