சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து, திரை பிரபலங்கள் தங்களது சுட்டுரையில் (டிவிட்டர்) செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன்: தீர்ப்புக்கும் அமைதியாக எதிர்வினையாற்ற மெரீனா உத்வேகம் தேவை. சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட மதிப்பளித்து எப்போதும் மக்கள் உறுதுணைபுரிவர். நீதிமன்றங்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும். மக்களும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
முன்னதாக, அவர் "நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொறுத்தாரே பூமியாள்வர்' என்று திங்கள்கிழமை பதிவு செய்திருந்தார்.
நடிகை கௌதமி: ஊழல் வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளார். அவர் ஜெயலலிதாவின் மறைவுக்கும் பதில் சொல்ல வேண்டும். இரண்டு வழக்குகளுக்கும் சரிசமமான தீர்ப்பு சரியாகாது. ஜெயலலிதாவின் மரணத்துக்கான நியாயம் வேண்டும்.
நடிகை குஷ்பு:
தமிழ்நாட்டின் குடிமகளாக ஆறுதல் அடைந்துள்ளேன். தமிழகம் பாதுகாப்பாக இருக்கிறது என்று மகிழ்ச்சி. சூழக் காத்திருந்த இருண்ட பேரிடர் ஒன்று முடிந்திருக்கிறது. மறைந்த முதல்வரின் மனம் சாந்தியடையும். தமிழக மக்களுக்கு சிறந்த காதலர் தின பரிசை உச்ச நீதிமன்றம் தந்துள்ளது. மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் அச்சமின்றி வாழலாம்.
அரவிந்த்சாமி: எம்எல்ஏக்களை மீண்டும் சமூகத்துக்கு வந்து வேலை செய்யச் சொல்லுங்கள். கொண்டாட இரு தரப்புக்கும் எதுவுமில்லை. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பும், அது சொல்லும் விஷயமும் என்ன என்று நினைவில் கொள்ளுங்கள். காபந்து முதல்வர் அலுவலகம் சென்று மற்ற எம்எல்ஏக்களுக்கு உதாரணமாக திகழ வேண்டும். முதலில் மக்கள், பிறகுதான் அரசியல்.