சென்னை: போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து பரப்பன அக்ரஹாரம் நீதிமன்றம் நோக்கி புறப்பட்டார் அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா.
முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய சசிகலா, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
பிறகு, வாகனம் மூலம் பெங்களூரு செல்கிறார். சென்னையில் இருந்து ஓசூர் வரை தமிழகக் காவல்துறை பாதுகாப்பு அளிக்கிறது. இதற்காக இரண்டு வாகனங்களில் தமிழகக் காவல்துறையின் அதிரடிப் படையினர் உடன் செல்கின்றனர்.
ஓசூரில் இருந்து பெங்களுரு வரை கர்நாடக காவல்துறை பாதுகாப்பு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் விமானம் மூலம் அவர் பெங்களூரு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அவர் வாகனம் மூலம் சாலை வழியாகவே பெங்களூரு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
சரணடைய கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்படும் என்று கூறப்பட்டது. அதனால், சசிகலா பெங்களூரு செல்வது உறுதி செய்யப்படாமல் இருந்தது.
ஆனால், சசிகலா தரப்பில் கால அவகாசம் கேட்டு வாய்மொழியாக வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துவிட்டதால், உடனடியாக அவர் பெங்களூருவுக்கு காரில் செல்ல திட்டமிடப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று மாலைக்குள் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டுள்ளனர்.