கிருஷ்ணகிரி அருகே மனைவியைக் கொலை செய்த வழக்கில் அவரது கணவரான முன்னாள் ராணுவ வீரருக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜீஞ்சுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் (49). இவரது மனைவி உஷா (39). இவர்களுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற வெங்கடேசன், கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததால், வெங்கடேசனுக்கும், மனைவி உஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், மனைவி உஷாவை கத்தியால் குத்தினார். இதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து, வெங்கடேசனைக் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், மனைவியைக் கொலை செய்த வழக்கில் வெங்கடேசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.