மூத்த பத்திரிகையாளர் டி.வி. பரசுராம் காலமானார்
மூத்த பத்திரிகையாளர் டி.வி. பரசுராம் (93) உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
அமெரிக்காவில் 1950-களில் பிடிஐ செய்தி நிறுவனத்தில் செய்தியாளராக தனது பத்திரிகைப் பணியைத் தொடங்கியவர் டி.வி. பரசுராம். நீண்டகாலமாக பிடிஐ செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய பரசுராம், பின்னர் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கிலப் பத்திரிகையில் அமெரிக்க செய்தியாளராக பணியில் சேர்ந்தார்.
சுமார் 20 ஆண்டுகளாக "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் பணியாற்றிய அவர், தனது 58-ஆவது வயதில் அங்கிருந்து வெளியேறி மீண்டும் வாஷிங்டனில் பிடிஐ செய்தி நிறுவனத்திலேயே சிறப்புச் செய்தியாளராக பணியில் சேர்ந்தார்.
பத்திரிகைத் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக "ஹாவர்டு நீமேன்' உள்ளிட்ட பல விருதுகளை பரசுராம் பெற்றுள்ளார். பல்வேறு அமெரிக்க அதிபர்களின் செய்தியாளர்கள் சந்திப்புகளில் பரசுராம் பங்கேற்றிருக்கிறார். தனது 82-ஆம் வயது வரை பத்திரிகையாளராக அவர் பணியாற்றினார்.
இதனிடையே, பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வுபெற்ற அவர் வாஷிங்டனில் உள்ள தனது மகளின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், சிறிது காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பரசுராம் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு அனந்த லட்சுமி என்ற மனைவியும், அசோக் பரசுராம் என்ற மகனும், அனிதா என்ற மகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.