சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலர் விகே சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் சரணடைகிறார்.
சசிகலாவும், இளவரசியும் அங்குள்ள பெண்களுக்கான சிறையில் தனித்தனி அறையில் அடைக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில், வி.கே. சசிகலா தமிழக சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு சட்ட நிபுணர்கள் அளிக்கும் விளக்கத்தில், விகே சசிகலாவை தமிழகத்தில் உள்ள சிறைக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு, கர்நாடக அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்.
அதற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்தால், சசிகலா தமிழக சிறைக்கு மாற்றப்படலாம். ஆனால், அதற்கு அவர்கள் முதலில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
பிறகு, சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்ற உத்தரவை மறு சீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட குறைந்தபட்ச வாய்ப்புகளே உள்ளன.
ஒரு வேளை அது நிராகரிக்கப்பட்டால், அப்போது சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி தமிழக அரசு, கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதலாம்.