வெப்பச் சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் புதன்கிழமை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஜனவரி 4 -ஆம் தேதி நிறைவு பெற்றதெனஅறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவான பலவீனமான காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக தமிழகத்தில் சில நாள்கள் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் தமிழகத்தில் புதன்கிழமை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
வெப்பச் சலனத்தின் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதேசமயம் வடதமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.