சென்னை: தமிழகத்தில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சர்களின் பட்டியல் இன்று வெளியானது. அதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் பன்னீர்செல்வம் வகித்து வந்த துறைகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது. அதாவது, காவல்துறை, இந்திய வனத்துறை, பொது நிர்வாகம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை உள்ளிட்ட துறைகளை இனி பழனிசாமி கவனிப்பார்.
முதல்வருக்கு அடுத்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
3வது இடம் கே.ஏ. செங்கோட்டையனுக்குக் கிடைத்துள்ளது. இவர் அமைச்சரவையில் புதியமுகம். பள்ளிக் கல்வித் துறை, தொல்லியத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. (மாஃபா பாண்டியராஜன் வகித்து வந்த துறைகள் இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.)
பன்னீர்செல்வம் வகித்து வந்த துறைகள் பழனிசாமிக்கும், மாஃபா பாண்டியராஜன் வகித்து வந்த துறைகள் செங்கோட்டையனுக்கும் வழங்கப்பட்டிருப்பது மட்டுமே தமிழக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இரண்டு மாற்றங்கள்.
ஜெயக்குமார் மீன்வளத் துறை அமைச்சராகவும், எஸ்.பி. வேலுமணிக்கு நகராட்சித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எம்.சி. சம்பத் தொழில்துறை அமைச்சராகவும், செல்லூர் கே. ராஜூ கூட்டுறவுத் துறை அமைச்சராகவும், பி. தங்கமணி மின்சாரத் துறை, சுங்க மற்றும் கலால் துறை அமைச்சராக பதவியேற்கிறார்கள்.
எஸ்.பி. வேலுமணி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராவும், சி.வி. சண்முகம் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சராகவும், சரோஜா சமூகல நலத்துறை அமைச்சராகவும் பதவியேற்க உள்ளனர்.
ஓ.எஸ். மணியன் கைத்தறித் துறை அமைச்சராகவும், துரைக்கண்ணு வேளாண்துறை அமைச்சராகவும், கே.பி. அன்பழகன் உயர்கல்வித் துறை அமைச்சராகவும், உணவுத் துறை அமைச்சராக காமராஜ் ஆகியோர் பொறுப்பேற்கின்றனர்.
கே. ராதாகிருண்ணன் வீடு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், விஜயபாஸ்கர் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும், துரைக்கண்ணு வேளாண் துறை அமைச்சராகவும் இன்று மாலை பதவியேற்கின்றனர்.
கடம்பூர் ராஜூ தகவல் மற்றும் விளம்பரத் துறையையும், ஆர்.பி. உதயகுமார் வருவாய்த் துறையையும் ஏற்கிறார்கள். என். நடராஜன் சுற்றுலாத் துறையையும், ராஜேந்திர பாலாஜி பால் மற்றும் பால்வளத்துறையையும், பெஞ்ஜமின் ஊரக தொழில்துறையையும், நிலோபர் கஃபீல் தொழிலாளர் துறையையும், விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறையையும் ஏற்க உள்ளனர்.
மணிகண்டன் தகவல் தொழில்நுட்பத் துறையையும், வி.எம். ராஜலஷ்மி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல்வாழ்வுத் துறையையும், ஜி. பாஸ்கரன் காதி மற்றும் கிராம தொழில் வாரியம் துறையையும், ராமச்சந்திரன் இந்து அறநிலையத் துறையையும், எஸ். வளர்மதி பிற்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலவாழ்வுத் துறையையும், பாலகிருஷ்ண ரெட்டி விலங்குகள் நலத் துறையையும் கவனிக்க உள்ளனர்.