சென்னை: சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்எல்ஏக்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் உள்ள மூத்த அமைச்சர்களும், மூத்ததலைவர்களும் சென்னையில் இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, சசிகலாவின் பொறுப்பு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் எல்எல்ஏக்கள் மனசாட்சிப்படி வாக்களித்தால் அம்மா ஆட்சி நிலைக்கும்.
அம்மாவின் ஆன்ம பலத்தைக் கொண்டு குடும்ப ஆட்சியை எதிர்த்து போராடுவோம் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய செம்மலை, தொகுதி மக்களின் கருத்தைக் கேட்டு எம்எல்ஏக்கள் முடிவெடுக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்எல்ஏக்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், மக்களும், தொண்டர்களும் நம் பக்கம் இருக்கிறார்கள். அதிமுகவில் தற்காலிக பொதுச் செயலராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டது செல்லாது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சசிகலா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கும். குடும்ப ஆட்சி வராமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுப்போம். தொண்டர்கள் அனைவரும் பன்னீர்செல்வம் பின்னால் இருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் சசிகலா எடுத்த முடிவுகள் அனைத்தும் செல்லாமல் போகும் என்று செம்மலை கூறினார்.