பேரவையில் தற்போது ஒட்டுமொத்த அதிமுக உறுப்பினர்களின் பலம் 134-ஆகும். இதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள 10 உறுப்பினர்களின் ஆதரவு போக, மீதமுள்ள 124 ஆதரவு தமக்கு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார்.
இதில், மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் நட்ராஜ் உள்ளிட்ட ஒரு சிலர் தங்களின் ஆதரவு தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை எனக் கூறி வந்தாலும், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.
அதன் அடிப்படையில்தான், ஆளுநர் வித்யாசாகர் ராவ் புதன்கிழமை இரவு முதலில் எடப்பாடி பழனிச்சாமியையும், இரண்டாவதாக ஓ.பன்னீர்செல்வத்தையும் அழைத்துப் பேசியுள்ளார். தற்போதைய சூழலில் பன்னீர்செல்வத்துக்கு 10-க்கும் மேல் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அவரது அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். என்ன செய்யப் போகிறார் ஓ. பன்னீர்செல்வம் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.