ஒசூர் வழியாக புதன்கிழமை மாலை பெங்களூரு நீதிமன்றத்துக்குச் சென்ற அதிமுக பொதுச் செயலர் சசிகலாவை காண பொதுமக்கள் திரண்டனர்.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அ.தி.மு.க. பொதுச் செயலர் சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய ஒசூர் வழியாகச் சென்றார்.
சென்னையிலிருந்து கார் மூலம் புதன்கிழமை மதியம் புறப்பட்ட அவர், மாலையில் ஒசூர் வழியாக பெங்களூருக்குச் சென்றார்.ஒசூர் வழியாக அவர் செல்வதை அறிந்த மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்தனர். ஒசூர் பேருந்து நிலையம், மூக்கண்டப்பள்ளி, சூசூவாடி ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்தனர்.
மாலையில் அவரது கார் வந்தபோது சசிகலாவை பார்த்து பொதுமக்கள் கையசைத்தனர். அதிமுக நிர்வாகிகள் வணக்கம் தெரிவித்தனர். அனைவருக்கும் சசிகலா வணக்கம் தெரிவித்தபடி சென்றார்.
பாதுகாப்புப் பணியில், கூடுதல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன் தலைமையில் போலீஸார் ஈடுபட்டனர்.