காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அணைகட்டும் திட்டங்களை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் 66 டிஎம்சி தண்ணீரைத் தேக்குவதற்கான அணைக்கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நடவடிக்கை காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கும் தமிழ்நாட்டின் பாசனம் மற்றும் குடிநீர் உரிமைகளுக்கும் எதிரானதாகும். கர்நாடக அரசின் சட்டவிரோத செயலை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசிடம் பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை.
மத்திய பிஜேபி அரசு கர்நாடக மாநில தேர்தல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் நலனை பலியிட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசும் மத்திய பிஜேபி அரசும் ஒன்றுசேர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிராக சதி செய்து வருகிறது. 15.02.2017 அன்று நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவைக் கூட்டம் காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணைகட்ட ரூ 5912 கோடி நிதியொதுக்கம் செய்ய அனுமதித்துள்ளது.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு தொடர்வறட்சிக்கு இலக்காகி பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இரு மாநிலங்களின் உறவை எல்லா நிலைகளிலும் சீர்குலைக்கும் இந்த நெருக்கடியான தருணத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அணைகட்டும் திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.