ஜனநாயகத்தைக் காக்கக்கூடிய ஓர் உயரிய முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் பிப்ரவரி 5, 2017 - அன்று அ.தி.மு.க. கட்சிக்குள்ளே தொடங்கிய அதிகாரப் பகிர்வு, பொறுப்பு ஆகியவற்றிற்கான சண்டை படிப்படியாக உயர்ந்து அந்த இயக்கம் இரு பிரிவுகளாகப் பிரிந்துகிடக்கிறது.
தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நிரந்தர ஆட்சி அமைக்க ஒரு அணியும், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்க மற்றொரு அணியும் இதுவரை 2 முறை தமிழக ஆளுநரை சந்தித்து
அழைப்புவிடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக ஆளுநர் கடந்த 10 நாட்களாக யாரையும் ஆட்சி அமைக்க அழைக்காமல் இருந்ததற்கு காரணம் சொத்துக்குவிப்பு வழக்கு என்றால் அதற்கான தீர்ப்பும் நேற்றைய தினம் வெளிவந்துவிட்டது. இதில் சம்பந்தபட்டவர்களுக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே தண்டனை பெற்றவர்கள் ஆட்சி அமைப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று நிரூபனமாகியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் அ.தி.மு.க.வினுடைய இரு பிரிவினரும் உண்மையாக, நியாயமாக, ஜனநாயக முறைப்படி, சுதந்திரமாக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கக்கூடிய நிலை ஏற்படுமா, நிலையான நல்லாட்சி தமிழகத்தில் வருங்காலத்தில் வளர்ச்சி ஏற்படுவதற்கு சாத்தியமா இல்லையா என்ற ஐயமும்,
சந்தேகமும் பொது மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
காரணம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அ.தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் இப்போது ஏமாற்றத்தோடு அவர்களின் நடவடிக்கைகளை பார்க்கிறார்கள். இத்தகைய தமிழக அரசியலின் இக்கட்டான சூழலில் தமிழகத்தின் வளர்ச்சியை கருதி ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், உண்மையிலேயே மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்க முடியுமா, முடியாதா என்ற உண்மை நிலையை தமிழக ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு பல கோணங்களிலே, பல சந்தேகங்களைத் தீர்க்கக்கூடிய வகையில் விசாரித்து ஜனநாயகத்தைக் காக்கக்கூடிய ஓர் உயரிய முடிவை எடுக்க வேண்டும்.
மேலும் இன்றைக்கு இருக்கின்ற தமிழக அரசியல் சூழலில் காலம்தாழ்த்தாமல் மக்களுக்கு தெளிவு ஏற்படுத்தக்கூடிய, நம்பிக்கை அளிக்கக்கூடிய முடிவை தமிழக ஆளுநர் அறிவிக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.