மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் புதன்கிழமை (பிப்.15) சபதம் செய்த வி.கே.சசிகலா, அதன்பின் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய போயஸ் கார்டனில் இருந்து சசிகலா புதன்கிழமை காரில் புறப்பட்டார்.
வீட்டில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். இதன்பின், மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு நண்பகல் 12 மணிக்குச் சென்றார்.
சபதம் செய்த சசிகலா: பெங்களூரு செல்லும் முன்பு, ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய சசிகலா கையால் மூன்று முறை சமாதியில் அடித்து சபதம் செய்தார். பின்னர் சமாதியை சுற்றி வந்து வணங்கினார்.
சூழ்ச்சி, துரோகம், இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வருவேன் என சபதம் செய்து அங்கிருந்து பெங்களூர் நீதிமன்றத்திற்கு புறப்பட்டு சென்றார். அவருடன் இளவரசியும் காரில் சென்றார்.
ராமாபுரம் தோட்டம்: பின்னர் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்துக்குச் சென்று அங்கு எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி வணங்கி அங்கு தரையில் அமர்ந்து தியானம் செய்தார் சசிகலா. மேலும், அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கும் அவர் மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.