சென்னை: கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் செல்வதை எதிர்க்கும் வகையிலான தர்ம யுத்தம் தொடரும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் அறைகூவல் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் நிலையற்ற தன்மைக்கு முடிவுக்கட்டும் விதமாக அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று காலை அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்துஇன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் அதிமுகப்பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆதிக்கத்தை எதிர்த்து எதிர்க்குரல் எழுப்பிய தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இதுவரை நாங்கள் எடுத்து வந்த முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இங்கு நேரடியாக வந்திருந்த கட்சியினர், மகளிர், இளைஞர்கள் ஆகிய அனைவருக்கும் பாதம் தொட்டு எனது நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்.
அதிமுக கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் செல்வதை எதிர்க்கும் வகையில்தான் நாங்கள் இதுவரை போராடி வந்தோம்.
அநீதிக்கு எதிரான இந்த தர்ம யுத்தம் உங்கள் அனைவரின் ஆதரவுடன் தொடரும்
இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.