தமிழகச் சூழலை உணர்ந்து பெரும்பான்மை பலம் உள்ளவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக தலைவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் மிகச் சிறப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
அரசியல்வாதிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு அரசியலில் அவர்கள் ஈடுபட முடியாத வகையில் வழங்கப்பட்டிருக்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடம். மார்க்சிஸ்ட் கட்சிக்கு இந்தத் தீர்ப்பு மனநிறைவை அளித்திருக்கிறது.
கடந்த செப்டம்பர் 22 -ஆம் தேதிக்குப் பிறகு, தமிழகத்தின் பிரதானப் பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. கடுமையான வறட்சி, வேலைவாய்ப்பின்மை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள் என அனைத்து மக்கள் பிரச்னைகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. இத்தகையச் சூழலில் தமிழக சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மை ஆதரவு உள்ளவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆளுநர் காலம் தாழ்த்துவதற்கான காரணம் தெரியவில்லை.
தேவைப்பட்டால் மார்க்சிஸ்ட் கட்சி ஆளுநரை நேரில் சந்தித்து இதுதொடர்பாக வலியுறுத்தும் என்றார் அவர்.