வால்பாறை எஸ்டேட் பகுதியில், பொதுமக்கள் மீது பாய்ந்து கடித்து வந்த கருங்குரங்கு (கருமந்தி), வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியில், கடந்த சில மாதங்களாக ஒரு கருங்குரங்கு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இரு சக்கர வாகனத்தில் செல்வோரையும் நடந்து செல்வோரையும் இந்தக் குரங்கு தாக்கி வந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் சென்ற அசோக் (36) என்பவர் மீது இக்குரங்கு கடித்தது. இவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இக்குரங்கைப் பிடிக்க மானாம்பள்ளி வனச் சரக அலுவலர் சேகர் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து, கண்காணித்து வந்தனர்.
அந்தக் கூண்டில் கருங்குரங்கு புதன்கிழமை சிக்கியது. 5 வயதுள்ள இந்த ஆண் கருங்குரங்கை, வனத்துறையினர் மானாம்பள்ளி வனப் பகுதிக்குள் விடுவித்தனர்.