பெங்களூர்: அதிமுக பொதுச் செயலர் சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 14ம் தேதி சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து 15ம் தேதி சசிகலா பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அப்போது, நீதிபதி முன்னிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பிறகு, அங்கிருந்து சிறைச்சாலைக்கு சசிகலா செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து சிறைக்குச் செல்ல, காவல்துறை ஜீப்பில் வருமாறு காவல்துறையினர் அழைத்த போது, அதனை ஏற்க மறுத்து, எவ்வளவு தூரமாக இருந்தாலும் நடந்தே செல்கிறேன் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், காவல்துறை ஜீப்பில் வர முடியாது என்று அவர் கோபத்தோடு கூறியதாகவும் சில ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சசிகலா சரணடைந்த போது அதிக மன உளைச்சலில் இருந்ததாகவும், கோபம் மற்றும் அதிருப்தியில் இருந்ததாகவும் அப்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
முதல்வர் கனவு தவிடுபொடியாகி, 4 ஆண்டுகள் சிறைவாசம் என்ற மிகப்பெரிய பேரிடியை விடவும், சிறைச் சாலைக்குள் அவருக்கு மற்றுமொரு ஏமாற்றம் காத்திருந்தது.
முன்னதாக, முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் இதே பெங்களூர் சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட போது அவருக்கு முதல் வகுப்பு அறையும், அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டதைப் போலவே இந்த முறையும் வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால், அங்கே நிலை தலைகீழ். முதல் வகுப்பு மட்டுமல்ல.. சசிகலா கேட்ட எந்த வசதியும் வழங்கப்படாமல், இரண்டாம் வகுப்பு அறை மட்டுமே வழங்கப்பட்டது. அதில் சசிகலாவும், இளவரசியும் அடைக்கப்பட்டனர். அன்று இரவு முழுவதும் அவர் உறங்காமல், யாருடனும் பேசாமலேயே இருந்ததாகவும், தமிழகத்தின் தற்போதைய நிலவரம் குறித்து அறியவும் கூட அவர் ஆர்வம் காட்டவில்லை என்றும் சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.