அதிமுகவின் இரு அணிகளாலும் தமிழகத்தில் நல்லாட்சியை அளிக்க முடியாது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
நாகர்கோவிலை அடுத்த உடையப்பன்குடியிருப்பில், செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது:
புதிய அரசால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. 50 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தும் கழகங்கள் எதுவும் செய்யவில்லை. வளர்ச்சியை மனதில் கொள்ளாத எந்த அரசும் தமிழகத்தை ஏமாற்றும் அரசாகத்தான் அமையும்.
பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியைத் தர முடியும். பாஜகவை பொருத்தவரை அதிமுகவின் இரு தரப்புக்கும் ஆதரவு இல்லை. இரு தரப்பினராலும் நல்லாட்சியை தர முடியாது.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க பல கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள பாஜக அப்படி செய்யவில்லை. மத்தியில் வேறு யாரும் ஆட்சியில் இருந்திருந்தால், இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்திருக்கும் என்றார் அவர்.