இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு: நெடுவாசலில் விவசாயிகள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோகார்பன்) எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு, அக்கிராம மக்கள் கடும்
நெடுவாசலில் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
நெடுவாசலில் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோகார்பன்) எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு, அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அத்திட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி, வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்பட நாட்டின் 31 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நெடுவாசலில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவர்கள், பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்று, மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது:
ஓஎன்ஜிசி நிறுவனம், எங்கள் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எரிவாயு எடுப்பதற்காக நிலங்களைக் கையகப்படுத்தி, அங்கு சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைத்து பணிகளை மேற்கொண்டது. அப்போது நாங்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். இதையடுத்து, இயற்கை எரிவாயு சோதனை பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது.
கடந்த ஆண்டு நெடுவாசல் கிராமத்தில் மேலும் சில இடங்களில் நிலங்களை கையகப்படுத்த அந்நிறுவனம் முயன்றபோது விவசாயிகள் சம்மதிக்கவில்லை.
இந்நிலையில், எங்கள் பகுதி விவசாயிகளின் கருத்து கேட்காமலேயே மத்திய அமைச்சரவை இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இத்திட்டம் குறித்து எதையும், சம்பந்தப்பட்ட நிறுவனம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மண்வளம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்து வேளாண் தொழில் அழியும் அபாயம் உள்ளது. விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பியுள்ள எங்கள் பகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் தெரிவித்தனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை உடனே ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com