சென்னை: முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனக்குள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து மக்கள் நலனுக்கான ஆட்சி நடத்திட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
15 நாள்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பேரவையில் தனது பெரும்பான்மையை எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதை வரவேற்கிறோம் என்றார் அவர்.
2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகான 9 மாதங்களுக்குள் இதுவரை தமிழகம் காணாத வகையில் மூன்றாவது முதல்வரை அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்திருப்பது ஒரு விநோதமான "ஹாட்ரிக்' சாதனை.
புதிதாக அமையப் போகும் ஆட்சியைப் பொருத்தமட்டில் ஏற்கனவே செயல்படாமல் உறக்கத்தில் இருந்த அதிமுக ஆட்சியின் தொடர்ச்சியாகவேதான் நான் பார்க்கிறேன்.
அரசியல் சட்டத்துக்குட்பட்டு புதிய முதல்வரை நியமித்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி அளித்திருந்தாலும், அமையப் போகும் அரசால் தமிழக மக்களுக்கு நீடித்த நிம்மதி கிடைக்குமா என்பதில் தெளிவு இல்லை.
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்கும் விழாவுக்கான அழைப்பிதழ் எனக்கும் கிடைத்தது.
ஆனால், ஏற்கெனவே ஒப்புகொண்ட நிகழ்ச்சியால் அவசர கோலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சார்பில் என் வாழ்த்துகள்.
அதே நேரத்தில், பெங்களூரூ சிறைக்குச் சென்று ஆலோசனைகள் கேட்டு ரிமோட் கன்ட்ரோலில் இயக்கப்படாமல், அரசியல் சட்டப்படி எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிக்கும் ரகசிய காப்பு பிரமாணத்துக்குப் பாதகம் வராமல் முதல்வர் செயல்பட வேண்டும்.
முதல்வருக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் முழுதும் உணர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆட்சி நடத்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தை சூழ்ந்துள்ள பல்வேறு பிரச்னைகளுக்கும், ஒரு செயல்படும் நல்ல அரசு நிர்வாகத்தை இந்த புதிய அரசின் மூலம், தமிழகம் பெறுமா? என்பது கேள்விக்குறியாகவே இருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.