சென்னை: சட்டப்பேரவையில் என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என்று முதல்மைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது:
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததையடுத்து அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவருடைய தலைமையிலான அரசு நம்பிக்கையான அரசாக இருக்குமா என்பது பற்றி எனக்கு தெரியாது.
நாளை சட்டப்பேரவை வரும் முதல்வர் சட்டப்பேரவையில் தன்னையும் எதிர்க்கட்சியினரையும் பார்த்து சிரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும், தற்போது அமைந்துள்ளது மக்கள் விரோத ஆட்சி என்று கூறினார்.
முன்னதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலினை பார்த்து சிரித்ததாக சசிகலா உள்ளிட்ட அவரது தரப்பினர் கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.