எம்.ஜி.ஆர். மரணத்துக்குப் பிறகு ஒரே மாதத்தில் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர். கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பரில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, 1988-ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். அவரது அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டது. திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில், இந்திரா காங்கிரஸைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் பதவியை ராஜிநாமா செய்ததாக பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவையில் பெரும் கைகலப்பு ஏற்படவே, 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திய அவைத் தலைவர், ஜானகி ராமச்சந்திரன் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சட்டப் பேரவையில் இப்போதுதான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்படுகிறது.
கடந்த 2006-2011-ஆம் ஆண்டு 100-க்கும் குறைவான உறுப்பினர்களைப் பெற்றிருந்த போதும், காங்கிரஸ் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைத்தது.
அப்போதுகூட சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.