சென்னை: சட்டசபையில் நாளை நடைபெற உள்ள நமபிக்கை வாக்கெடுப்பானது ரகசிய வாக்கெடுப்பாக நடைபெற்றால் அதனை ஆதரிப்போம் என்று சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடிபழனிசாமி மீது நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் யாருக்கு வாக்களிப்பது என்பதைமுடிவு செய்ய திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டமானது அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாரலின் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் நிலவும் அரசியல் செயலற்ற தன்மைக்கு முடிவு காட்டும் விதமாக திமுக விடுத்த கோரிக்கையை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பை நாளை நடத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.
இதனை எதிர்க்கும் விதமாக நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுகவின் 89 எம்.எல்.ஏக்களும் எதிராக வாக்களிப்பார்கள்.
நாளை ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க ரகசியாய் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் திமுக அதனை ஆதரிக்கும்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.