புதிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு 3-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை (பிப்.16) எளிமையான முறையில் நடைபெற்றது. அவருடன் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட 30 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். அமைச்சர்களில் கே.ஏ.செங்கோட்டையன் மட்டும் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, 2012-ஆம் ஆண்டு அவர் தனது அமைச்சர் பதவியை இழந்தார்.
இதன் பின், அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவே இல்லை.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் இருந்தார் எடப்பாடி கே.பழனிசாமி.
இப்போது அவர் முதல்வரான நிலையில், அவரது மூன்றாவது இடத்துக்கு கே.ஏ.செங்கோட்டையன் வந்துள்ளார்.
அமைச்சரவையில் இரண்டாவது இடம் வகித்த திண்டுக்கல் சி.சீனிவாசன், அதே இடத்தில் தொடர்கிறார். இதைத் தவிர்த்து, மற்ற அமைச்சர்களின் பொறுப்புகளிலோ அல்லது இட வரிசையிலோ எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.