முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா முடிந்த பின்னர், ஜெயலலிதா சமாதிக்கு வியாழக்கிழமை மாலை சென்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. அவருடன் அமைச்சர்களும், அதிமுக துணை பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றனர். அங்கு, ஜெயலலிதாவின் சமாதியில் மலர்வளையம் வைத்ததுடன், மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களிலும்..: இதையடுத்து, எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களிலும்முதல்வர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மூன்று தலைவர்களுக்கும் மரியாதை செலுத்திய பின்னர், போயஸ் தோட்ட இல்லத்துக்குச் சென்றனர்.
இன்றோ, நாளையோ பொறுப்பேற்பு? முதல்வர், அமைச்சர்கள் பொறுப்பேற்ற பிறகு தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை. அவர்கள் பெங்களூரில் உள்ள அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலாவை வெள்ளிக்கிழமை காலை சந்தித்த பின்னர் பிற்பகலில் தலைமைச் செயலகத்துக்கு வந்தோ அல்லது சட்டப் பேரவையில் சனிக்கிழமை பெரும்பான்மையை நிரூபித்த பின்னரோ பொறுப்பேற்கலாம் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.