தேனி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், ராணுவ வீரர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
போடி, சுப்புராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் குமார் (26). அசாமில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் போடிக்கு வந்திருந்த குமார், சுப்புராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் பாண்டியன் மகன் அருண்பாண்டி (18), ராஜேந்திரன் மகன் சூரியா (20) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தேனியில் இருந்து போடி நோக்கிச் சென்றார். மோட்டார் சைக்கிளை குமார் ஓட்டினார்.
தேனி- போடி சாலை கோடாங்கிபட்டி, ஒத்தவீடு பகுதியில் வந்த போது மூணாறில் இருந்து தேனி நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது, மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், குமார், அருண்பாண்டி, சூரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் இருந்த மின்கம்பம், மாட்டுக் கொட்டகை ஆகியவற்றின் மீது மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து, பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அருள் (37) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.