புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொல்.திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, கடந்த 5-ஆம் தேதி முதல் நீடித்து வந்த குழப்பம் தற்போது முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதைத் தொடர்ந்து முடிவு வந்துள்ளது. சசிகலா மீதான தீர்ப்பு எதிர்பார்த்ததுதான். குடும்ப அரசியலை மக்கள் எதிர்த்து வருகின்றனர். தற்போது பதவி ஏற்றுள்ள அரசு, விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். மேலும், முதல்வர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி, மத்திய அரசு ஜிஎஸ்டி, உதய் மின் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றியுள்ளது. புதிய முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு எனது வாழ்த்துகள் என்றார் அவர்.
உடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருவண்ணாமலை மாவட்டச் செயலர் ம.கு.பாஸ்கரன், ஆரணி தொகுதிச் செயலர் முத்து, ஒன்றிய நிர்வாகி திருமலை மற்றும் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.