புதுவையில், பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது.
புதுவையில், கடந்த ஜனவரி மாதம் முதலே பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த தயாளன், மதியழகன், பனித்திட்டு பகுதியைச் சேர்ந்த பானுமதி, பெரிய காலாப்பட்டைச் சேர்ந்த முருகன், அரியாங்குப்பத்தைச் சேர்ந்த சத்யநாராயணன் ஆகியோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இந்த நிலையில், முருங்கப்பாக்கம் சுதானா நகரைச் சேர்ந்த கார்த்திக் வியாழக்கிழமை காலை பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அறிவித்தது.
இதையடுத்து, பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், புதுவை ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளும், ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.