தமிழகம் முழுவதும் ஆற்றுப்படுகைகளில் செயல்படும் மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.அப்பாவு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நீர் ஆதாரங்களில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. போதிய நீர் இல்லாததால், விவசாயிகள் நெருக்கடியான சூழலில் உள்ளனர். மேலும் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால், நீர் நிலைகளின் பரப்பளவு குறுகி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2002 -ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி, ஆறுகள், ஆற்றுப்படுகைகளில் மணல் எடுப்பது குறித்து ஆய்வு செய்ய, பல்வேறு துறையைச் சேர்ந்த வல்லுநர் அடங்கிய உயர்மட்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.
அந்தக் குழு, ஆற்றுப்படுகையில் இருந்து கட்டுமானங்களுக்கு மணல் அள்ளுவதற்கு பதிலாக, கற்களை உடைத்து கிடைக்கப்பெறும் மணலை (ஙஹய்ன்ச்ஹஸ்ரீற்ன்ழ்ங்க் நஹய்க், ங-நஹய்க்) கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தலாம் என அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதையடுத்து, கற்களை உடைத்து உருவாக்கப்படும் மணலை பயன்படுத்துவதற்கான அனுமதி அளித்து பொதுப் பணித்துறை அறிவிப்பையையும் வெளியிட்டது.
மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆற்று மணலுக்கு மாற்றாக கற்களை உடைத்து உருவாக்கப்படும் மணல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தார். இருப்பினும், இவற்றை முறையாக அரசு செயல்படுத்தவில்லை.
எனவே, தற்போது உள்ள மணல் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். மாற்று மணல் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை மனு அளித்தேன். அவற்றை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு இரண்டு வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் மீதான விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.