முதல்வருக்கு தலைவர்கள் வாழ்த்து

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர்.
முதல்வருக்கு தலைவர்கள் வாழ்த்து

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர்.


முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் வாழ்த்து
முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி கே.பழனிசாமிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வரை செல்லிடப்பேசியில் வியாழக்கிழமை இரவு தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதற்காக அவருக்கு முதல்வர் நன்றியும் தெரிவித்தார்.

பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதல்வருக்குரிய கடமைகளை உணர்ந்து எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
15 நாள்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பேரவையில் தனது பெரும்பான்மையை எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதை வரவேற்கிறோம் என்றார் அவர்.
பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகான 9 மாதங்களுக்குள் இதுவரை தமிழகம் காணாத வகையில் மூன்றாவது முதல்வரை அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்திருப்பது ஒரு விநோதமான "ஹாட்ரிக்' சாதனை.
புதிதாக அமையப் போகும் ஆட்சியைப் பொருத்தமட்டில் ஏற்கனவே செயல்படாமல் உறக்கத்தில் இருந்த அதிமுக ஆட்சியின் தொடர்ச்சியாகவேதான் நான் பார்க்கிறேன்.
அரசியல் சட்டத்துக்குட்பட்டு புதிய முதல்வரை நியமித்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி அளித்திருந்தாலும், அமையப் போகும் அரசால் தமிழக மக்களுக்கு நீடித்த நிம்மதி கிடைக்குமா என்பதில் தெளிவு இல்லை.
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்கும் விழாவுக்கான அழைப்பிதழ் எனக்கும் கிடைத்தது.
ஆனால், ஏற்கெனவே ஒப்புகொண்ட நிகழ்ச்சியால் அவசர கோலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சார்பில் என் வாழ்த்துகள்.
அதே நேரத்தில், பெங்களூரூ சிறைக்குச் சென்று ஆலோசனைகள் கேட்டு ரிமோட் கன்ட்ரோலில் இயக்கப்படாமல், அரசியல் சட்டப்படி எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிக்கும் ரகசிய காப்பு பிரமாணத்துக்குப் பாதகம் வராமல் முதல்வர் செயல்பட வேண்டும்.
முதல்வருக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் முழுதும் உணர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆட்சி நடத்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


ஜி.கே.வாசன் (தமாகா): தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கு வாழ்த்துகள். அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் நிலுவையில் உள்ள முக்கியப் பிரச்னைகளுக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும்.
பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி): 11 நாள்கள் காலம் கடத்தி இறுதியாக வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அழைத்தார். புதிய முதல்வருக்கு வாழ்த்துகள். அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தாற்காலிக ஆளுநரை மாற்றிவிட்டு நிரந்தர ஆளுநரை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும்.
ஜவாஹிருல்லா (மமக): புதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள். வறட்சி, காவிரிப் பிரச்னை, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தமிழகம் எதிர்கொண்டிருக்கும் சவாலான சூழ்நிலையில் புதிய அரசு அமைந்துள்ளது. இந்தச் சவால்களுக்கு தீர்வுகாணும் வகையிலும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் புதிய அரசு செயல்பட வேண்டும்.
நிஜாமுதீன் (இந்திய தேசிய லீக்): தமிழகத்தில கடந்த 10 நாள்களாக ஏற்பட்ட குழப்பம் ஜனநாயகத்தின் அழுத்தத்தால் முடிவுக்கு வந்தது. ஒரு சமானியனான எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். ஜனநாயக மரபோடு நடுநிலையான மக்களாட்சியைத் தர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com