இது சட்டப்பேரவையா.. அல்லது சட்டையை கிழிக்கும் பேரவையா என்பது தெரியவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பானி பழனிசாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் தனபால் அதை நிராகரித்துவிட்டார். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது மு.க. ஸ்டாலின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும், இதில் ஸ்டாலின் சட்டை கிழிந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இது சட்டப்பேரவையா.. அல்லது சட்டையை கிழிக்கும் பேரவையா என்பது தெரியவில்லை. எதிர்கட்சி தலைவர் சட்டை கிழிக்கப்பட்டது, முதலில் அவர் அனுமதிக்கப்படவில்லை என்றார், சோதனை நடத்தப்பட்டது என்றார். என்னத்தான் நடக்கிறது என்பது தெரியவில்லை.
கூவாத்தூரில் அடைக்கப்பட்டவர்கள் அந்த மனநிலையில் அப்படியே அமர்ந்து இருந்தார்கள். அதிலிருந்து அவர்கள் வெளியேவரவில்லை. திமுகவினர் ரகசிய வாக்கெடுப்பு கோரியது சரியானது. வாக்கெடுப்பு நடக்கும் இடம் அமைதியான சூழல் நடக்கவேண்டும். இது வருங்கால தமிழகத்தை வழிநடத்தும் ஒரு நிகழ்வு. ஒட்டுமொத்த அளவில் சட்டப்பேரவை நேர்மையான களமாக திகழ வேண்டும் என்றார்.