சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ள எம்.எல்.ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று பேரவையில் நிலவும் அமளிக்கிடையில் சபாநாயகர் தனபால் உறுதி அளித்துள்ளார்.
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.அதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
சபை கூடியதும் பன்னீர்செல்வத்தின் அணியினைச் சேர்ந்த கொறடாவான செம்மலையை பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குரல் எழுப்பினார். அதனைத் தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே யார் பேசுவது என்பதில் கடும் அமளி ஏற்பட்டது.
அத்துடன் ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.
இந்த அமளிக்கு இடையே முதல்வர் பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
ஆனால் தொடர்ந்து பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும் ரகசிய வாக்கெடுப்பு கோரியும் திமுக,காங்கிரஸ் மற்றும் பன்னீர்செல்வம்அணி எம்.ஏல்.ஏக்கள் கோசம் எழுப்பி வந்தனர். இதனால் கடும் குழப்பம் நிலவியது.
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் தனபால், 'உறுப்பினர்கள் பாதுகாப்புதான் உங்கள் கோரிக்கை என்றால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ள அனைத்து எம்.ஏல்.ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். எனவே சபையின் மாண்பு, உரிமை ஆகியவற்றை நிலைநாட்ட உதவுங்கள்' என்று கோரிக்கை விடுத்தார்.