கடலூர் கடல் பகுதியில் பரவியுள்ள கச்சா எண்ணெய்க் கழிவுகளை, மாவட்ட ஆட்சியர் த.பொ. ராஜேஷ் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை, எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த மாதம் 28-ஆம் தேதி இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதிக் கொண்டன. இதையடுத்து, கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்து பரவியது. இதனை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.
இந்த நிலையில், கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, நல்லவாடு உள்ளிட்ட கடற்கரைப் பகுதியிலும் எண்ணெய்க் கழிவுகள் பரவியுள்ளன. மேலும், கடற்கரையோரங்களிலும் எண்ணெய் திட்டுகள் அதிகளவில் ஒதுங்கியுள்ளதால் கடல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 4 நாள்களாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ராமசுப்பு, கோட்டாட்சியர் விஜயா, கடலோரக் காவல் படையினர், நகர நிர்வாக அதிகாரிகள், மீன்வளத் துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். கடல் நீர், எண்ணெய் திட்டுகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எண்ணெய் திட்டுகள் ஒதுங்கியதை அடுத்து, கடல் பகுதியின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடலில் கலந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் 200 பேர் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள் மீனவர்களின் ஒத்துழைப்புடன் எண்ணெய் திட்டுகளை அகற்றும் பணியில் ஈடுபடுவர் என்றார் ஆட்சியர்.