கல்லூரித் தலைவர் கொலை வழக்கில் சரணடைந்த இளைஞரை வேலூர் நீதிமன்றம் மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர், கல்லூரித் தலைவர் ஜி.ஜி.ரவி (55). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்பாடியில் திருமண விழாவில் பங்கேற்க சென்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த பழனியின் மகன் குப்பன் (27) உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந் நிலையில், திருச்சி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சரணடைந்த குப்பன், அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸாரால் அழைத்து வரப்பட்டு வேலூர் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குப்பன் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரிடம் வழக்குத் தொடர்பாக மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதித்துறை நடுவர் சி.எம்.வெற்றிமணி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் குப்பனை போலீஸார் அழைத்துச் சென்றனர்.