சென்னை கிரீன்வேஸ் சாலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரின் ஆதரவாளர்கள் மோதல் தொடர்பான புகார்களின்பேரில், அபிராமபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் பிளவு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு வந்திருந்த ஆதரவாளர்களுக்கும், இவரது வீட்டுக்கு அருகேயுள்ள அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வீட்டுக்கு வந்திருந்த ஆதரவாளர்களுக்கும் இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த பாலாஜி, ஆயுதப்படைக் காவலர் சங்கரநாராயணன் உள்பட 3 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் சி.வி.சண்முகம் தரப்பு தாக்கியது குறித்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பாலாஜியும், அமைச்சரின் காரை மறித்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்க முயன்றதாக சி.வி.சண்முகத்தின் உதவியாளர் வடிவேலுவும் அளித்த புகார்களின்பேரில் அபிராமபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் வீடு முன் பலத்த பாதுகாப்பு: இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.