அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தின் நிலைமையை காவல் துறையினர் மாற்றிவிட வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தாங்கள் விரும்பாத ஓர் ஆட்சிக்கு துணைபோகும் எம்.எல்.ஏ.க்களுக்கு தங்களது மன உணர்வுகளை தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அமைதியான முறையில் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் அவர்களை கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
வாக்களித்த மக்களுக்கு தங்களது வேதனைக் குரலை வெளிப்படுத்த வேறு வழி தெரியவில்லை. எனவே, கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை காவல் துறையினர் உடனே விடுவிக்க வேண்டும். தமிழகத்தை ஜெயலலிதா அமைதிப் பூங்காவாக மாற்றி வைத்திருந்தார். அந்த நிலைமையை காவல் துறையினர் மாற்றிவிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.