சென்னை காஞ்சிபுரம் அருகே தீக் குளித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் அரசு மருத்துவமனையில் இன்று இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
காஞ்சிபுரம் பல்லவர்மேடு மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் அ.மூசா (37). அதிமுக தொண்டரான இவர், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார். இந்நிலையில் மூசா, பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் பதவியை இழந்ததினால் மிகுந்த வருத்ததில் இருந்தார். இந்நிலையில் பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வராக்கக் கோரி மூசா, சிவகாஞ்சிபுரம் மண்டித் தெருவி்ல் கடந்த புதன்கிழமை இரவு தீக் குளித்தார்.
இதில் பலத்த காயமடைந்த மூசா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை நேரில் சந்தித்து பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் மூசா சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். இது குறித்து போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.