ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக வேண்டும் எனக் கூறி, தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் மூசா (40). கூலித் தொழிலாளி. அதிமுக தொண்டரான இவர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தீவிர ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும், சசிகலா ஆதரவாளர்களுக்கும் இடையே நிலவி வரும் முதல்வர் பதவிக்கான போட்டி காரணமாக, மூசா மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக வேண்டும் எனக் கூறி மூசா புதன்கிழமை இரவு தீக்குளித்தார். இதையடுத்து, அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை காலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று மூசாவையும், அவரது குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து தீக்குளித்த அதிமுக தொண்டர் மூசா (40). சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.