பாம்பன் கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம் பகுதியிலிருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாம்பன் முந்தல் முனை கடற்கரையில் ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த மாத்திரைகளை கொண்டு வந்தவர்கள் யார், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.