மக்களின் உணர்வுகளைப் புரிந்து அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
குடும்ப ஆட்சி வரக்கூடாது என்பதற்காக தனது உடல் நலத்தையும் பாராமல் சுற்றுப் பயணம் செய்து, அதிமுகவை ஜெயலலிதா வெற்றி பெறச் செய்தார். மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்குத்தான், அவரால்தான் எம்எல்ஏக்கள் ஆனோம்.
ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி தொடர வேண்டும். இதற்காக ஆதரவு தெரிவித்த மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜுக்கு நன்றி. ஜெயலலிதாவின் கொள்கையை கட்டிக் காக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த நல்ல முடிவு வரவேற்கத்தக்கது.
பேரவையில் வாக்களிக்கும் முன்பு, சுதந்திரமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
ஜெயலலிதாவை ஒரே ஒருமுறை நினைத்துப் பாருங்கள். உண்மைத் தொண்டர்கள் யாருடைய ஆசை வார்த்தைகளுக்கும் மயங்க மாட்டீர்கள்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், தமிழக மக்களின் எண்ணங்களுக்கு மாறாகவும், அவர்களின் விருப்பத்தை உணராமலும் வாக்களிக்கக் கூடாது. இந்தக் கடைசி நேர வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
இரட்டை இலை சின்னம்: ஜெயலலிதா போராடி பெற்ற சின்னம்தான் இரட்டை இலை. ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகளின் ஆதரவுவும், மக்களின் ஆதரவும் நமக்குத்தான் இருக்கிறது. ஆகவே, இரட்டை இலை சின்னமும் நமக்குதான் சொந்தம் என்பதை நிரூபியுங்கள் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.