மறைமுக வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் நிச்சயமாக இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும்: மு.க. ஸ்டாலின்

மறைமுக வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் நிச்சயமாக இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும்: மு.க. ஸ்டாலின்

மறைமுக வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் நிச்சயமாக இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைமுக வாக்கெடுப்பை  நடத்தியிருந்தால் நிச்சயமாக இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

தமிழகத்திற்கு இது ஒரு மோசமான ஒரு கருப்பு நாளாக அமைந்திருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் பெற்றிருக்கக்கூடிய சசிகலா நடராஜன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பினாமி ஆட்சியாக, ஒரு முகமூடி ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி என்று சொல்வதை விட எடுபுடி பழனிசாமி என்று சொன்னால் சரியாக பொருந்தக்கூடியவர், தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய வகையில் இன்று சட்டப்பேரவையில் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னால் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளை சார்ந்திருக்கக்கூடிய சட்டப்பேரவை உறுப்பினர்களான நாங்கள் எல்லாம் சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் எடுத்து வைத்த கோரிக்கை என்னவென்றால், ஏறக்குறைய 10 நாட்களாக அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு, இன்று சிறைக் கைதிகளை போல கொண்டு வந்து, சட்டப்பேரவை தேர்தலில் எப்படி ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்களோ, அதுபோலவே இன்று அதிகார மையத்தை தங்கள் கையில் தக்க வைத்துக் கொள்வதற்காக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கோடி, கோடியாக பல கோடி ரூபாய்களை கொடுத்தும், அவர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் கொண்டு வந்து வாக்களிக்க வைத்திருக்கிறார்கள்.

மறைமுக வாக்கு என்ற அடிப்படையில் வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் நிச்சயமாக இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஆனால், அதன்படி செய்ய சபாநாயகர் முன் வரவில்லை. ஆகவே, இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் முடிவெடுக்க ஐந்தாறு தினங்கள் நேரம் கொடுக்க வேண்டும் அல்லது மறைமுக வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். இருமுறை சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார். 3 மணிக்கு அவை தொடங்குவதற்கு முன்பே இரண்டரை மணியளவில், காவல்துறையையும், அடியாட்களையும் வரவழைத்து, சட்டப்பேரவையில் இருந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களான எங்களை எல்லாம் மூட்டைகளை தூக்குவது போல எங்களை எல்லாம் குண்டு கட்டாக தூக்கி வந்து, அவைக்கு வெளியில் வீசினார்கள். இதில் ரவிசந்திரன் என்ற சட்டப்பேரவை உறுப்பினர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அதில் நானும் தாக்கப்பட்டு, எனது சட்டை கிழிந்துள்ளது. அதன் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பை சர்வாதிகார முறையில் நடத்தியுள்ளனர்.

இதுபற்றி எல்லாம் நாங்கள் ஆளுநரிடத்திலும் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். நாங்கள் சொன்னதை உன்னிப்பாக கேட்டுக் கொண்ட ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

இதனையடுத்து, நாங்கள் அனைவரும் மெரினாவில் உள்ள காந்தி சிலை எதிரில் அமைதி வழியில் எங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தை தொடங்கினோம். ஆனால் காவல்துறையினர் எங்களை கைது செய்து கொண்டு செல்கின்றனர். எது எப்படியானாலும், இந்தப் போராட்டத்தை திமுகதான் நடத்தும் என்பது இல்லை.

குற்றவாளியான சசிகலாவின் பினாமியாக உள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி வரவே கூடாதென்று மக்கள் உறுதியோடு இருந்தார்கள். ஆனால் அவர்கள் இன்றைக்கு மிகுந்த அதிர்ச்சிக்கும், பெரும் அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். எனவே, இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்ற பொதுமக்களுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மட்டுமல்ல, பல்வேறு கட்சிகளையும், இந்த ஆட்சியின் மீது அருவருப்பிலும், கோபத்திலும் உள்ள ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஒன்று திரட்டி, அமைதி வழியிலான ஒரு விரைவில் மிகப்பெரிய தொடர் போராட்டத்தில் ஈடுபட நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.

பொதுமக்களை பொறுத்தவரையில், அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று பேசப்படுகிறது, அதற்கு சசிகலா குடும்பம் தான் காரணம் என்றும் மக்கள் உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி, எழுதி வாங்கிக்கொண்டு முதல்வர் பதவியில் உட்கார வைத்து விட்டு, பிறகு சசிகலாவை சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுத்து, அந்த பதவியில் அமர்த்தும் சூழலை ஏற்படுத்தினார்கள். இந்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த காரணத்தால், அவரால் முதல்வராக முடியாமல் போனது. ஆனால், பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி அல்லது எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி, இந்த ஆட்சி இருக்கக்கூடாது என்று தான் பொதுமக்கள் கருதுகிறார்கள். அதனால் தான், நாங்கள் இந்த அறவழி போராட்டம் நடத்துவதென திடீரென முடிவெடுத்து, காந்தி சிலை எதிரில் உட்கார்ந்ததும், ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் எல்லாம் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து திரண்டனர்.

ஆளுநர் அமைதியாக இருந்தால், நாங்களும் அமைதி வழியிலான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com