மாணவர் போராட்ட அச்சுறுத்தல் எதிரொலி: மெரீனாவில் போலீஸார் குவிப்பு

சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் மீண்டும் நடைபெறபோவதாக வெளியான தகவலையடுத்து, வெள்ளிக்கிழமை அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் மீண்டும் நடைபெறபோவதாக வெளியான தகவலையடுத்து, வெள்ளிக்கிழமை அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல லட்சம் பேர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பித்தது. போராட்டத்தின் முடிவில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.
அதன்பின்னர், மெரீனா கடற்கரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே, நிலைமை கட்டுக்குள் இருந்ததால் இந்தத் தடை உத்தரவு கடந்த 4 -ஆம் தேதி திரும்பப் பெறப்பட்டது.
இந்த நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் காரணமாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி உருவாகியுள்ளது.
இதில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதேபோல், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி, ஒரு தரப்பினர் மெரீனாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.
இந்த தகவல்களின் அடிப்படையில், மெரீனாவில் வெள்ளிக்கிழமை காலை முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அங்கு சுமார் 500 போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மெரீனா கடற்கரை முழுவதும் ரோந்துப் பணியிலும், கண்காணிப்புப் பணியிலும் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்துக்குரிய இளைஞர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலைமை சீராகும் வரை மெரீனா கடற்கரையில் போலீஸாரின் இந்த நடவடிக்கைகள் தொடரும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com