அதிமுகவில் இருந்து நீக்குவதற்கு மதுசூதனனுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கூவத்தூர் தனியார் விடுதியில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஏற்கெனவே அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் இ.மதுசூதனன். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் பிறரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிப்பது வேடிக்கையாக உள்ளது.
மேலும், கட்சி விதியின்படி, யாரையும் கட்சியை விட்டு நீக்குவதற்கு அதிமுக அவைத்தலைவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இத்தனை நாள் கட்சியில் இருந்தவருக்கு இந்த அடிப்படை விதி கூட தெரியவில்லை. ஒருவரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு பொதுச் செயலருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா இருக்கிறார். அதனால் அவர் மட்டுமே நிர்வாகிகளை நீக்கவும், சேர்க்கவும் அதிகாரம் கொண்டராகவும் உள்ளார். எனவே மதுசூதனன் அதிமுக நிர்வாகிகளை நீக்கியதாக வந்த தகவல் அனைத்தும் தேவையற்ற ஒன்று என்றார்.