சென்னை: வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம் என்று பார்ப்போம் என்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.
சசிகலா முதல்வராக எடுத்த முயற்சிகளுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர் குரல் எழுப்பியதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவிவந்தது. இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டதால், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக முன்மொழிந்தார். இதையடுத்து தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதை அடுத்து தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டு வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது.
15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிருபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருந்தார். ஆனால், கூவத்தூர் தனியார் நட்சத்தி விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் மனது மாறுவதற்கு முன்பாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்ட எடப்பாடி பழனிச்சாமி, இன்று சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தார். இதையடுத்து இன்று 11 மணிக்கு சிறப்பு பேரவை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதில் வெற்றி பெற்றால் தான் ஆட்சியை தொடர முடியும்.
இந்த நிலையில், நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்க பதிவில், “இன்று காண்போம். நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.